பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக் மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானகிய
இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்கு போதித்தார். அதன் பின்னர்தான்
அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர்.ஆன்மீக நாட்டம் கொண்டோர் அதாவது இறைவனது திருவடிகளைப் பற்றி கொள்ள
வேண்டும். தனித்திருக்க வேண்டும். விழித்திருக்க வேண்டும் எனப் பொருள் கூறப்பெறுகிறது.
இவ்வாறு பசித்து, தனித்து , விழித்து இருந்தால் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது சிவபதவியோ, வைகுண்ட பதவியோ கிடைக்கும் எனவும் கூறப் பெறுகிறது.
இவ்வாறு இருந்தவர்கள் இப்பதவிகளைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.
பசித்திரு, விழித்திரு, தனித்திரு எனும் சொற்களுக்குரிய உண்மைப் பொருளை
உணர முற்படுவதே நமது எண்ணமாகும்.
பசித்திரு என்பது பட்டினி கிடப்பது அன்று. வயிற்றைக் காயப்போடுதல் மிகச்சிறந்த
மருந்தாகும் என்பார்கள் சித்த வைத்திய, ஆயுர்வேத மருத்துவர்கள்.
இல்லாமையினால் பட்டினி கிடப்பதற்கும் – எல்லாமிருந்து உண்ணாமல் நோன்பு
நோற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இது உடலைப் பொருத்த விஷயமன்று.
உணர்வைப் பொருத்தது. மனதின் ஆளுமையில் அடங்குவது. எண்ணங்களின் தொகுதிதான் மனம். ஏதும் இல்லாமையினால் பட்டினி கிடப்பது இறப்பிற்கு சமமாகும். எல்லாம் இருந்தும் புலன் அடக்க, உணர்ச்சி அடங்கி, உணர்வு விழித்து உயிர் தழைக்க இருக்கும் நோன்பிற்கு [விரதம்] என்பதே உண்ணா நோன்பு. இதுவே பசித்து இருத்தல்.
இவ்வாறு இருத்தல் உடலுக்கு நல்லது. ஊனுடம்பு ஆலயம், உடல் நலமானால் உள்ளம்
வளமாகும். உள்ளம் வளமானால் உயிர் தளிர்க்கும். பசித்திருத்தல் உடல் தொடர்புடையது.
இந்நிலையில் உடலுக்கு நன்மை பயக்கும். மிதமான உணவே நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் வழியாகும்.
நாள் தோறும் ஒருவர் பசித்திருந்து – பசித்திருப்பது அறமாகிய உண்ணா நோன்பினை
ஒருவர் மேற்கொண்டால் உடல் நிலை என்னவாகும்? விரைவில் இந்த உடல் அழிந்து
இறந்து விடுவார். இவ்வாறு உடல் அழிந்துவிடும் ஒன்றையா ஆன்றோர்களும், சித்தர்
பெரியோர்களும் சொல்லியிருப்பார்கள்.
குரு இட்டும், தொட்டும், சுட்டிக்காட்டாத வித்தை கைவசம் ஆகாது என்பார்கள்.
குரு வழி செவிச் செல்வத்தைப் பெறாதவர்கள் ஆன்மீகத்தில் அதன் எல்லையை
அடையமுடியாது. குரு தயவின்றி நடுக்கண் புருவப்பூட்டுத் திறக்காது. எனவே குருவே
சிவம். மெய்வழிச் செல்லும் மெய்க்குரு முன்னிலையில் சீடன் பதித்திருக்கவேண்டும்.
ஏனெனில் குரு ஞானச் செல்வத்தை வாரி வழங்கும்போது அதனைச் செவி வாயாக,
நெஞ்சில் கொள்ளுவதற்கு உடல் பசித்திருக்க வேண்டும்.
பசித்திருந்து ஞானத்தைக் கேட்க வேண்டும்.உடல் தள்ர்ச்சியுறாமல் இருக்க அரை வயிறு
உண்டால் போதும். அபோதுதான் புலன்கள் விழிப்போடு ஒருமைப்பட்ட மனத்தோடும்,
ஞானச் செல்வத்தைச் செவிமடுக்கும். எனவே பசித்திருத்தல் என்பது இல்லாமையினால்
பட்டினி கிடப்பது அன்று. சில குறிக்கோள்களை முன்வைத்து உண்ணா நோன்பு
இருத்தலும் அன்று.
ஞானச் செல்வத்தைச் செவிவழி அருந்திட ஞானப்பசி மூதுர உடல் பசி மறந்து வாய்மூடி
இரு செவி திறந்து கேட்டிருக்கும் நிலையே பசித்திருத்தல். குருவின் உபதேசத்தால்
மெய்யாகிய அறிவைக் காட்டித் தருகிற போது இதுவரை மன அறிவால் படித்தவை,
கேட்டவை, உணர்ந்தவை அனைத்தும் மெய்யைக் காண, அறிய, உணரத்தடையாக
அமையும். எனவே யதார்த்த உள்ளத்தோடு செவி மூலமாக ஞானத்தைப் பருக, கேட்க
வேண்டும். பசித்திருக்கும் ஞானப் பசியும் இதுவேயாகும்.